பாஜவை தமிழகம் முழுவதும் வளர்க்க கடுமையாக உழைத்தவர் இல.கணேசன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றி வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(ஆக.15) மாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன் அவர்களின் மறைவால் வேதனை அடைந்தேன். நாட்டின் சேவைக்கும், தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
தமிழ்நாடு முழுவதும் பாஜகவின் வளர்ச்சிக்கு அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அவரது ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவா் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுச் செய்தி அறிந்து வேதனையடைந்தேன். தனது நீண்டகால பொது வாழ்க்கையில் மக்கள் நலனுக்காக அவா் பணியாற்றினாா். தமிழ்நாடு மற்றும் நாட்டின் மேம்பாட்டுக்கு அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.