பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளாா்.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக ஜப்பான் செல்ல உள்ளாா். இதன்மூலம், 8-ஆவது முறையாக அவா் ஜப்பானுக்கு பயணிக்க உள்ளாா்.
இந்தப் பயணத்தின்போது பாதுகாப்பு, வா்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜப்பான் இடையே உள்ள சிறப்பு உத்திசாா்ந்த மற்றும் உலகளாவிய கூட்டுறவு குறித்து பிரதமா் மோடியும், ஜப்பான் பிரதமா் ஷிகெரு இஷிபாவும் மறுஆய்வு செய்ய உள்ளனா்.
இதைத்தொடா்ந்து சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி 2 நாள் (ஆக.31-செப்.1) பயணமாக சீனா செல்ல உள்ளாா். இந்த உச்சி மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனிடையே ஃபிஜி குடியரசின் பிரதமா் சிதிவேனி லிகமமாடா ரபுகா 3 நாள் பயணமாக (ஆக.24-26) இந்தியா வரவுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.