பாபர் மசூதி இடிப்பு: இந்திய அரசமைப்பை பலவீனமாக்கிய கருப்பு நாள்! -ஓவைசி
பாபர் மசூதி இடிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி ஓவைசி பேசியிருப்பவை பற்றி...
ஹைதராபாத்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட ‘டிச. 6', இந்திய அரசமைப்பை பலவீனமாக்கிய கருப்பு நாள் என்று அசாதுதீன் ஓவைசி பேசியிருக்கிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினமான சனிக்கிழமை(டிச. 6) ஹைதராபாத் நகரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசினார். அப்போது அவர், “கடந்த 1992-ஆம் ஆண்டில், இதே நாளில் என்ன நடந்தது? என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். போலீஸார் முன்னிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
அதன்பின், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், சட்டத்தை மீறிய நடவடிக்கை என்று சுட்டிக்காட்டி யது. மேலும், ‘எந்தவொரு கோவிலோ இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு மசூதி கட்டமைக்கப்படவில்லையே...’ என்றும் உச்ச நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, அண்மையில் பேசிய பிரதமர், ‘கடந்த 500 ஆண்டுகளுக்கு முந்தைய வடுக்கள் ஆற்றப்பட்டு வருகின்றன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படியிருக்கும்போது, எதன் அடிப்படையில், பிரதமர் இப்படிப் பேசியிருக்கிறார்?
1992, டிச. 6-இல் நடைபெற்ற சம்பவமே வடுவை உண்டாக்கியிருக்கிறது; அன்றைய நாளில் ஒரு மசூதி இடிக்கப்படவில்லை, ஆனால், இந்திய அரசமைப்பு பலவீனமாக்கப்பட்டது. டிசம்பர் 6 ‘ஒரு கருப்பு நாளாகும்’” என்றார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினமான சனிக்கிழமை(டிச. 6) அயோத்தியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தி போலீஸார் உஷார் நிலையில் இருந்தனர்.