திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளால் இண்டிகோ குளறுபடி! மாநிலங்களவையில் விளக்கம்!
இண்டிகோ குளறுபடி குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்திருப்பது பற்றி...
திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே இண்டிகோ விமான நிறுவனத்தின் குளறுபடிக்கு காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு திங்கள்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) அமலுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று பதில் அளித்து பேசினார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது:
“இண்டிகோ நிறுவனத்தின் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் அட்டவணை மற்றும் உள்திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே குளறுபடிக்கு காரணம்.
கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கூட, விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் தொடர்பாக எவ்வித ஆட்சேபனையும் இண்டிகோ நிறுவனம் தெரிவிக்கவில்லை.
விமானப் போக்குவரத்து துறையில் அதிகமான நிறுவனங்கள் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவில் தற்போது 5 பெரிய நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதுவும் அமைச்சகம் தரப்பில் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகும்.
தாமதங்கள் மற்றும் ரத்துகளால் சிரமப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் உதவ கடுமையான சிவில் விமானப் போக்குவரத்து தேவை விதிகள் உள்ளன. இதனை விமான நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மென்பொருள் பிரச்னை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து துறையில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப மேம்பாடு நடந்து வருகிறது. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை உலகத் தரம் வாய்ந்த உயர்ந்த தரநிலைகளை கொண்டு வருவதே அரசின் தொலைநோக்குப் பார்வை.
கடந்த 3 நாள்களில் மட்டும் 5,86,705 இண்டிகோ பயணிகளுக்கு அவர்களின் பயணச்சீட்டுத் தொகையான ரூ. 569 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
IndiGo crisis happened due to problems in internal planning system - Ram Mohan Naidu
இதையும் படிக்க : வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு: பிரதமர் மோடி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.