ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு
ஹைதராபாதில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிலை திறக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் உள்ள அரசுக்கு சொந்தமான "ரவீந்திர பாரதி' என்ற கலாசார மையத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை தெலங்கானா மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஸ்ரீதர்பாபுவும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவும் திங்கள்கிழமை திறந்துவைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானா மாநில பாஜக தலைவர் என்.ராம்சந்தர் ராவ், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி எஸ்.பி.சைலஜா மற்றும் குடும்பத்தினர் முக்கியஸ்தர்கள், ரசிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement
நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசுகையில் "எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிலை புதிய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். பாடுவதில் அவர் ஒரு பேரரசராகத் திகழ்ந்தார். அவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது. ஒரு நடிகருக்காக அவர் பாடும்போது திரையில் அந்த நடிகரே பாடுவது போன்று இருக்கும்.
மிகவும் எளிமையான மனிதரான அவர் மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்துள்ளார். தொலைக்காட்சியில் "பாடுதா தீயகா' என்ற நிகழ்ச்சி மூலம் இளம் பாடகர்களை அவர் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் நூற்றுக்கணக்கான இளம் பாடகர்கள் உருவானார்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியமும் என்னைப் போன்று நெல்லூரைச் சேர்ந்தவர் என்ற முறையில் எனக்கு அவருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது' என்று குறிப்பிட்டார்.
தெலங்கானா அமைச்சர் ஸ்ரீதர்பாபு பேசுகையில் "எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசைப் பேரரசராகத் திகழ்ந்தார். அவர் தனது வாழ்நாளில் 40,000 பாடல்களைப் பாடியுள்ளார். ஜாதி, மத, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து அவரது செல்வாக்கு பரவியிருந்தது.
அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தவுடன் அதை தெலங்கானா அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டது. அவர் பெரும்பான்மையான பாடல்களை ஹைதராபாதில்தான் பாடினார்' என்றார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிலை திறப்பையொட்டி தெலங்கானா தனி மாநில ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில் "தெலங்கானாவைச் சேர்ந்த கவிஞர்கள் மற்றும் பிரபலங்களின் சிலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தனர்.