மணிப்பூர்: சக வீரர்களை சுட்டுக் கொன்று பாதுகாப்புப் படை வீரர் தற்கொலை!
மணிப்பூரில் பாதுகாப்புப் படை வீரர் நடத்திய துப்பாக்கிச் சூடு பற்றி...
மணிப்பூரில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், சக வீரர்கள் இருவர் பலியாகினர்.
மேலும், 8 வீரர்கள் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் லாம்சங் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களின் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் உள்ள ஹவில்தார் சஞ்சய் குமார் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் தனது துப்பாக்கியால் சக வீரர்களை சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஒரு உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு வீரர்கள் பலியாகினர். மேலும், முகாமில் இருந்த 8 வீரர்கள் குண்டு காயம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதே துப்பாக்கியால் சுட்டு சஞ்சய் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த வீரர்கள் அனைவரும் இம்பாலில் உள்ள மண்டல மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை திரும்பப் பெற தயார்: மோடி
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மத்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
அசாதாரண சூழல் தொடர்வதால் மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சி நேற்று மாலை கொண்டுவரப்பட்ட சில மணிநேரங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.