மகா கும்பமேளா: ஊர் திரும்பும் வழியில் பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்!
கர்நாடகத்திற்கு திரும்பும் வழியில் பக்தர்கள் 6 பேர் பலியாகினர்.
மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பும் வழியில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் இருந்து பிப். 18 அன்று மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள 8 பேர் ஜீப்பில் சென்றனர்.
கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் இன்று காலை மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் ஜபல்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியானவர்கள் அனைவரும் கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்திலுள்ள கோகாக் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.