திருப்பதி அருகே திரையரங்கில் பலியிடப்பட்ட ஆடு! பிரபல நடிகரின் ரசிகர்கள் கைது!
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் டாகு மகாராஜ் வெளியீட்டின்போது, திரையரங்குக்கு வெளியே ஆட்டை பலிகொடுத்த ரசிகர்கள் கைது
டாகு மகாராஜ் வெளியீட்டின்போது, திரையரங்குக்கு வெளியே ஆட்டை பலிகொடுத்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் டாகு மகாராஜ் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதியில் வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டின்போது, திருப்பதி, டாடா நகரில் உள்ள பிரதாப் திரையரங்கின் வெளியே உயிருள்ள ஆட்டை, பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் பலிகொடுத்து கொண்டாடினர். இந்த சம்பவத்தை விடியோ எடுத்து சமூக ஊடகங்களிலும் பரப்பினர்.
இந்த நிலையில், பொது இடத்தில் ஆடு கொல்லப்பட்டதை அறிந்த பீட்டா அமைப்பு, இதுகுறித்து புகார் அளித்தது. இதனையடுத்து, விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இறைச்சிக் கடைகள்தவிர, பொது இடங்களில் விலங்குகள் கொல்லப்படுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோயில்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் விலங்குகளை மத ரீதியாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ பலியிடுவதைத் தடைசெய்யும் குறிப்பிட்ட சட்டங்கள் உள்ளன.
கடந்தாண்டு செப்டம்பரில் வெளியான நடிகரி பாலகிருஷ்ணாவின் மருமகன் ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா: பகுதி 1 படத்தின் வெளியீட்டின்போதும், இதுபோன்ற சம்பவம் தொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவியது.