மகா கும்பமேளா: மௌனி அமாவாசை நாளில் 5.7 கோடி பேர் புனித நீராடல்!
மகா கும்பமேளாவில் மெளனி அமாவாச நாளான இன்று (ஜன. 29) 5.7 கோடி மக்கள் புனித நீராடியுள்ளனர்.
பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மெளனி அமாவாச நாளான இன்று (ஜன. 29) 5.7 கோடி மக்கள் புனித நீராடியுள்ளதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மகா கும்பமேளாவில் 19.9 கோடி பக்தர்கள் பங்கேற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
மௌனி அமாவாசையான இன்று (ஜன. 29) திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்தனர். இதன் விளைவாக இன்று அதிகாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இக்கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மெளனி அமாவாச நலான இன்று திரிவேணி சங்கமத்தில் 5.7 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 5.5 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
நடப்பு மகா கும்பமேளாவில் சுமாா் 40 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பார்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
திரிவேணி சங்கமத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், காவல் துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒருபுறமும், ஞானிகள், அகோரிகள் புனித நீராட மறுபுறமும் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க பக்தர்கள் புனித நீராடிய பிறகு ஞானிகள், அகோரிகள் புனித நீராட மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.