முகப்பு
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமா!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 21 ஜூலை, 2025 at 4:33 PM
ஜகதீப் தன்கர்
பகிர்:

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக இன்று (ஜூலை 21) அறிவித்துள்ளார்.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி, பரிசோதனை செய்துகொண்டு ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜிநாமா குறித்து உரிய விளக்கத்துடன் குடியரசுத் தலைவருக்கு தன்கர் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

மருத்துவ ஆலோசனையைப் பின்பற்ற வேண்டியுள்ளதால், அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

எனது பதவிக் காலத்தில் கிடைத்த அசைக்க முடியாத ஆதரவிற்கும், அமைதியான பணி உறவுக்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமருக்கும், அமைச்சர்கள் குழுவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை; மேலும், நான் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் பாசம் என்றென்றும் நினைவில் இருக்கும். நமது மாபெரும் ஜனநாயகத்தில் குடியரசு துணைத் தலைவராக நான் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்கள் மற்றும் பரந்த அறிவுக்காக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அதிவேக வளர்ச்சியையும் நேரில் காண்பது மிகுந்த பெருமையான தருணம்.

இந்த மதிப்புமிக்க அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது, நாட்டின் எழுச்சி மற்றும் தனித்துவமான சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறேன். நாட்டின் பிரகாசமான எதிர்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறேன் எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜிநாமா கடிதம்
summary

Vice President Jagdeep Dhankhar resigns from his post "to prioritise health care and abide by medical advice

முழு கட்டுரையைப் படிக்க →