வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை: 1.5 கிலோ தங்கம், ரூ.1.44 கோடி பறிமுதல்
வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தி 1.5 கிலோ தங்கம், ரூ.1.44 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புவனேஸ்வரம்: ஒடிசா மாநில வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தியபோது, வீட்டிலிருந்து தங்க நாணயங்களும் கட்டுக்கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 1.50 கோடி ரொக்கப் பணம் எண்ணப்பட்டுள்ளதாகவும், தங்கக் கட்டிகள் உள்பட 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒடிசா மாநில துணை வனக் காப்பாளர் பதவியில் இருக்கும் ராமசந்திரா நேபக் என்பவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் கீழ், வெள்ளிக்கிழமை காலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
Advertisement
இவருக்கு மாத ஊதியம் ரூ.69,680 என்றும், இவர் 1989ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ஏராளமான வீடுகள், குடியிருப்புகளையும் நிலங்களையும் அவர் வாங்கிப் போட்டிருப்பதாகவும், பணத்தை எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அதிகாரிகள் ரொக்கப் பணத்தை எண்ணியதாகவும் கூறப்படுகிறது.
தங்கம் 1.5 கிலோவும், வெள்ளி 4.63 கிலோவும், நான்கு தங்கக் கட்டிகளும், 16 தங்க நாணயங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், ஏராளமான சொத்து ஆவணங்களும் பறிமுதர்ல செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பறிமுதல் செய்த பொருள்கள் அனைத்தும் தனது மகனுடையது என்றும், அவர் சுயதொழில் நடத்தி சம்பாதித்தது என்றும் கூறியுள்ளார். தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள், மகனின் திருமணத்தின்போது பரிசுப் பொருள்களாகக் கிடைத்தவை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.