முகப்பு
இந்தியா

அவதூறாகப் பேசி கைதான இன்ஸ்டா பிரபலத்துக்கு இடைக்கால ஜாமீன்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறாகப் பேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜூன், 2025 at 12:47 PM
ஷர்மிஸ்தா பனோலி - எக்ஸ்
பகிர்:

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டு கைதான இன்ஸ்டா பிரபலத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாலிவுட் நடிகர்கள் குறித்து அவதூறு விடியோ வெளியிட்ட புணே சட்டக் கல்லூரி மாணவி ஷர்மிஸ்தா பனோலி (வயது 22) கடந்த மே 30 ஆம் தேதி கொல்கத்தா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவர், தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டு, பின்னர் நீக்கிய விடியோவில் வகுப்புவாத சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியிருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், அவர் மீது மேற்கு வங்கத்திலுள்ள 4 வெவ்வேறு காவல் நிலையங்களில் புகாரளிக்கப்பட்டன.

இந்நிலையில், கொல்கத்தா காவல் நிலையத்தில், வஜாத் கான் காத்ரி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பனோலி குருகிராமத்தில் கைது செய்யப்பட்டார். மேலும், அவரை வரும் ஜூன் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ரூ.10,000 பிணை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொல்கத்தா நீதிமன்றம் அவருக்கு, நேற்று (ஜூன் 4) இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பனோலி மீது புகாரளித்த வஜாத் கான் மீது கொல்கத்தா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் தற்போது தலைமறைவாகவுள்ளதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

இத்துடன், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் அவதூறாகப் பேசி விடியோ பதிவு செய்ததாக வஜாத் கான் மீது மும்பை, அசாம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில் புகாரளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காவல் துறை ஆலோசனையை புறக்கணித்து அவசர கதியில் நடத்தப்பட்டதா வெற்றிப் பேரணி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.