மும்பையில் விமான சேவை பாதிப்பு: இண்டிகோ முக்கிய அறிவிப்பு
மும்பையில் கனமழை பெய்து வருவதால் விமானப் போக்குவரத்து சேவை பாதிப்பு.
மும்பையில் கனமழை பெய்து வருவதால் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மும்பையில் இன்று(திங்கள்கிழமை) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வானிலை மோசமாக இருப்பதால் விமானப் போக்குவரத்து சேவையும் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது விமானங்கள் இயக்கப்படுவதாகவும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் தனது பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இண்டிகோ தனது எக்ஸ் பக்கத்தில்,
"தற்போது மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் விமானங்கள் புறப்படுவதில் தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து நீங்கள் இன்று பயணம் செய்கிறீர்கள் என்றால், விமானங்கள் தாமதமாகப் புறப்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். கூடுதல் நேரமும் பயணிக்க நேரிடலாம். ஏனெனில் வானிலை காரணமாக விமானம் மெதுவாகவே செல்லும்.
நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். விரைவில் விமானங்கள் புறப்பட ஏற்பாடு செய்வோம்.
பயணிகள், புறப்படுவதற்கு முன் எங்களுடைய மொபைல் செயலி அல்லது http://bit.ly/31paVKQ என்ற இணையதளத்தில் நீங்கள் பயணிக்கும் விமானத்தின் நிலவரம் பற்றி தெரிந்துகொள்ளவும்" என்று குறிப்பிட்டுள்ளது.