ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்! மிரட்டிய பெண் மருத்துவர் கைது!
ஏர் இந்தியா விமானத்தில் ரகளை செய்த பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டது பற்றி...
பெங்களூரில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பெண் மருத்துவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் இருந்து சூரத் விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
அப்போது, விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறிய ஆயுர்வேத பெண் மருத்துவர் வியாஸ் ஹிரல் மோகன்பாய் என்பவர் இரண்டு கைப் பைகளுடன் வந்துள்ளார்.
Advertisement
ஒரு பையை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 20 எஃப் இருக்கைக்கான இடத்தில் வைத்த அவர், மற்றொரு பையை விமான ஊழியர்கள் அமரும் பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்துள்ளார்.
இதனை பார்த்த விமான ஊழியர்கள் பையை எடுக்குமாறும், ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த வியாஸ் ஹிரல், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தனது பையை அங்கிருந்து எடுத்தால் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு விமானி தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, வியாஸ் ஹிரல் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதனால், இரண்டு மணிநேர தாமதத்துக்குப் பிறகு சூரத்துக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.
மேலும், கைது செய்யப்பட்ட வியாஸ் ஹிரல், காவல் நிலையத்திலும் போலீசாரை அவதூறு வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவரின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
காவல் நிலையத்துக்கு விரைந்த அவரது கணவர், சமீபகாலமாக பொது இடங்களில் வியாஸ் ரகளையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வியாஸ் ஹிரலிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.