ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை சரமாரியாக தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்!
தில்லி - போபால் வந்தே பாரத் ரயிலில் பயணியைத் தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்..
தில்லி - போபால் வந்தே பாரத் ரயிலில் ஒரு பயணியை அதே ரயிலில் பயணித்த பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி - போபால் இடையேயான வந்தே பாரத் ரயிலில் கடந்த 19 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங், தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தார். அப்போது தனது குடும்பத்தினருக்கு வேறு வரிசையிலும் தனக்கு வேறு வரிசையிலும் சீட் இருந்ததால், தனது குடும்பத்தினரின் அருகில் உள்ள பயணியை தனது இருக்கையை மாற்றிக்கொள்ள கூறியிருக்கிறார் ராஜீவ் சிங். அதற்கு அந்த பயணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜான்சி ரயில் நிலையத்தில் ஏறிய ராஜீவ் சிங்கின் ஆதரவாளர்கள், அந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளனர். சுமார் 5-6 பேர் அவரை அடித்த நிலையில் அவரது வாய், மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. ஒருவர் செருப்பைக் கொண்டும் அடித்துள்ளார்.
Advertisement
இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
அந்த பயணி தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாக பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள ஜான்சி ரயில்வே எஸ்.பி. விபுல் குமார், சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையிலும் விசாரணை அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.