முகப்பு
இந்தியா

ஜாதவ்பூர் பல்கலை கலவரம்: அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் மீது வழக்குப்பதிவு!

ஜாதவ்பூர் பல்கலையில் ஏற்பட்ட கலவரம் குறித்து...

Updated On : 3 மார்ச், 2025 at 10:15 AM
அமைச்சர் பிரத்யா பாசு வாகனத்தை மறித்த மாணவர் அமைப்பினர். - PTI
பகிர்:

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழக கலவரத்தில் அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் உள்பட பலர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க கல்வி அமைச்சரான பிரத்யா பாசு கடந்த சனியன்று (மார்ச் 1) பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜாதவ்பூர் பல்கலைக்கு சென்றிருந்தார். 

அப்போது பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரி, சிபிஐ(எம்) மாணவர் பிரிவான ’இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ)’ மற்றும் பிற இடதுசாரி மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.

மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் பிரத்யா பாசு

கல்லூரியிலிருந்து அமைச்சர் திரும்புகையில் சில மாணவர்கள் அமைச்சரின் காரை மறித்துப் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களுடன் அமைச்சருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது காரை மாணவர்கள் சேதப்படுத்தியதாகவும் அவரை உடல் ரீதியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அமைச்சர் பாசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சரின் கார் பல்கலையிலிருந்து கிளம்பியபோது மாணவர்களின் மீது மோதியதாகவும், இதனால் சில மாணவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திரனுஜ் ராய் எனப்படும் முதலாமாண்டு மாணவர் அமைச்சரின் கார் மோதியதில் காயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரின் காரை மறித்து அவருக்கு காயம் ஏற்படுத்தி, அவரது உடைமைகளைத் திருடியதாகக் குறிப்பிட்டு இந்திரனுஜ் ராய் உள்பட பல மாணவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் மொத்தம் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மேலும், அவர்கள் கல்லூரி வளாகத்தில் கலவரம் ஏற்படுத்தி பொதுச் சொத்திற்கு சேதம் உண்டாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அமைச்சர் பிரத்யா பாசு நாடகமாடுவதாகவும், அவர் வேண்டுமென்றே மாணவர்கள் மீது காரை ஏற்றிவிட்டு தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர் அமைப்புகள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.