முகப்பு
இந்தியா

17 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த ஆண் நண்பர்!

மும்பையில் 17 வயது சிறுமி ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது குறித்து...

Updated On : 4 மார்ச், 2025 at 7:02 AM
பகிர்:

மும்பையில் 17 வயது சிறுமி அவரது ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜித்து தம்பே என்கிற 30 வயது நபர் ஒருவர் நண்பராக இருந்துள்ளார்.

இவர்கள் இருவரும் சில மாதங்களாக நண்பர்களாக இருந்த நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் காதலிப்பதாக நினைத்து அந்தச் சிறுமியின் தாயார் வினவியபோது சிறுமி இல்லையென்று மறுத்தார். பின்னர், ஜித்துவிடம் இனிமேல் தனது பெண்ணைச் சந்தித்துப் பேசவேண்டாம் என சில நாள்களுக்கு முன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று (மார்ச் 2) மரோல் காந்தன் பகுதியில் இரவு 11.30 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் அந்தச் சிறுமி தனது தோழிகளுடன் இரவு உணவு முடித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜித்து, திடீரென தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை அந்தச் சிறுமியின் மீது ஊற்றி தீவைத்ததாகக் கூறப்படுகிறது.

இதில் முகம், கழுத்து, கைகள், கால்கள் என உடலில் 60% இடங்களில் அந்தச் சிறுமிக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது.

பதறிய நிலையில் உடனடியாக அங்கு வந்த அவரது தாய் தீக்காயங்களுடன் கிடந்த தனது மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். பாதிக்கப்பட்ட சிறுமி பேச முடியாத நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையில் அவர் அளித்தப் புகாரின் பேரில் ஜித்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெட்ரோல் ஊற்றி எரிக்கையில் அவருக்கும் காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

காவல்துறையில் அளித்தப் புகாரில், அந்தச் சிறுமி மருத்துவமனையில் தனது தாயிடம் “என் மீது எந்தத் தவறும் இல்லை. ஜித்து தான் என்மீது பெட்ரோல் ஊற்றி எரித்தான்” எனக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை முயற்சி, திரவம் வீசி கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →