முகப்பு
இந்தியா

10 ஆண்டுகளாக... 193 வழக்குகளில் 2-க்கு மட்டுமே தண்டனை!

2015 முதல் அமலாக்கத் துறையின் 193 வழக்குகளில் இதுவரை 2-க்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 19 மார்ச், 2025 at 2:53 PM
கோப்புப் படம்
பகிர்:

2015 முதல் அமலாக்கத் துறை தொடுத்த 193 வழக்குகளில் இதுவரை 2-க்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசியல் சார்பு அடிப்படையில் வழக்குகளை பதியவில்லை என்றும், நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே அமலாக்கத் துறை வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்குகள் குறித்து கேரள எம்.பி., ரஹீம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

'அமலாக்கத் துறை வழக்கு மற்றும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன; இதில் தண்டனைகள் எத்தனை வழக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளது' என்றார். அமலாக்கத் துறையில் அரசு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய நிதி மற்றும் வருவாய்த் துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி,

நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் மீது அமலாக்கத் துறை பதிந்துள்ள வழக்குகளுக்கு கட்சி ரீதியாகவும் மாநில வாரியாகவும் தரவுகள் இல்லை எனக் குறிப்பிட்டார்.

எனினும் கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை பதிந்த வழக்குகள் குறித்த விவரத்தை வெளியிட்டார்.

அதில் அதிகபட்சமாக 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையில் அதிகபட்சமாக 32 வழக்குகள் பதியப்பட்டிருந்தன.

ஆண்டுவாரியாக வழக்கு விவரங்கள்...

தொடர்ந்து அவர் பேசும்போது, 2015 முதல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் என 193 வழக்குகள் அமலாக்கத் துறை சார்பில் பதியப்பட்டுள்ளதாகவும்,

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 2 வழக்குகளுக்கு மட்டுமே விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதாவது மொத்த வழக்குகளில் 1.1% மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தத் தரவுகளில் இருந்து அமலாக்கத் துறையால் பதியப்படும் வழக்குகள் எதிர்க்கட்சியினரை அச்சத்திற்குள்ளாக்கவும், குற்ற வழக்குகள் உடைய அரசியல் கட்சியினர் பாஜகவின் இணைய வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படிக்க | இந்தியர்கள் அதிகம் பயணிக்க விரும்பும் வெளிநாடு எது?

முழு கட்டுரையைப் படிக்க →