சட்டவிரோதமாக குடியேறிய 900 வங்கதேசத்தினர்! விரைவில் நாடுகடத்தல்!
தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய 900 வங்கதேசத்தினரை நாடுகடத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தில்லியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த சுமார் 900 வங்கதேசத்தினர் விரைவில் நாடுகடத்தப்படுவார்கள் என அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து உரிய ஆவணங்களின்றி இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை நாடுகடத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 900 வங்கதேசத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணைகளுக்குப் பிறகு அவர்கள் தங்களது தாயகத்துக்கு நாடுகடத்தப்படுவார்கள் என தில்லி சிறப்பு காவல் ஆணையர் தேவேஷ் சந்திரா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தரவுகளின்படி, கிழக்கு திசையிலுள்ள எல்லையின் வழியாகச் சட்டவிரோதமாக இந்தியாவில் நுழையும் நபர்கள் குடியேறும் மாநிலங்களில் தில்லி முதலிடம் வகிப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும், தில்லியில் உரிய ஆவணங்களின்றி குடியேறிய சுமார் 700 வங்கதேசத்தினர் தங்களது தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த சில மாதங்களாக அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளில் தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறிய ஏராளமான வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: பனாமா அதிபருடன் சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!