ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பிகாரின் குடும்பா சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, “நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதமுள்ள உயர் சாதியினர் மட்டுமே பெருநிறுவனத் துறைகள், அதிகாரத்துவம் மற்றும் நீதித் துறையில் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். ராணுவம் கூட அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் பேச்சு சர்ச்சையான நிலையில், இன்று பிகாரின் பங்கா சட்டப்பேரவை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங், ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று தெரிவித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
“பாஜகவும் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் கட்சிதான். ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம். ஆனால், ராணுவத்தைப் பற்றி எப்படி பேச முடியும்?. நமது ராணுவ வீரர்களுக்கு ஒரேஒரு மதம்தான். அது ராணுவ மதம். ராணுவத்தை அரசியலுக்குள் இழுக்காதீர்கள். நாடு நெருக்கடியை சந்தித்த போதெல்லாம், நமது வீரர்கள் துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்தி இந்தியாவின் தலையை உயர்த்தியுள்ளனர்.
சாதி, மதம் தொடர்பான அரசியல் நாட்டுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன. அனைத்துப் பிரிவினரையும் உயர்த்த வேண்டும் என்பதே எங்களின் சிந்தனை. சாதி, மதம் அடிப்படையில் பாகுபாடு காட்ட நாங்கள் விரும்பவில்லை. நமது முன்னோர்களும் மக்களும் இதைப் பற்றி ஒருபோதும் யோசித்ததில்லை.” எனத் தெரிவித்தார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய ராஜ்நாத் சிங்,
“இந்தியாவுக்குள் ஊடுருவிய சில பயங்கரவாதிகள், காஷ்மீருக்கு சுற்றுலாச் சென்ற நமது இளைஞர்களின் மதத்தைக் கேட்டு, அவர்களின் குடும்பத்தின் முன் கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து நமது ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் அனைத்து முக்கிய பயங்கரவாத மறைவிடங்களும் அழிக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தொடங்கி பயங்கரவாதிகளை அழிப்போம். இந்திய பலவீனமான நாடு கிடையாது, உலகின் சக்திவாய்ந்த நாடாக அறியப்படுகிறது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கான மதிப்பு அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.