பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி, எம்.எம். நரவனே புத்தகத்தில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அந்த வரியை நாடாளுமன்றத்தின் அவையில் கூற இருப்பதாகவும், இதனை யாராலும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28 ஆம் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று முதல் பிப். 4 வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தேசிய பாதுகாப்பு குறித்தும், எல்லை ஆக்கிரமிப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஆதாரம் இருப்பதாகவும், முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில், இந்திய எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி பேசினார். இதனால் இந்தப் புத்தகம் வெளியாவதை ஆளும் கட்சியினர் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியிடப்படாத, நம்பகத்தன்மையற்ற ஒரு புத்தகத்தில் இருந்த கருத்துகளை மேற்கோள் காட்ட முடியாது எனக் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். காங்கிரஸ் கட்சியினரும் கோஷங்களை எழுப்பியதால், அவை ஒத்திவைக்கப்பட்டது.
அவைக்கு வெளியே இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் நரேந்திர மோடியும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அஞ்சும் ஒரு வரி உள்ளது. அந்த வரியை அவையில் கட்டாயம் கூறுவேன். இதனை யாராலும் தடுக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.