தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ’கோடி மீடியா’வின் பிரசாரம் என்று பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவுகள் நேற்று நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.
பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் பிகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
”நாங்கள் கருத்துக்கணிப்புகளால் மகிழ்ச்சியோ, வருத்தமோ அடைவதில்லை. இந்தக் கருத்துக்கணிப்புகள் வெறும் உளவியல் அழுத்தங்கள் மட்டுமே, அதிகாரிகளின் அழுத்தத்தால் நடத்தப்படுபவை. இதே 'கோடி மீடியா'தான் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சியைக் கைப்பற்றியதாகக் செய்தி வெளியிட்டது. இது 'கோடி மீடியா'வின் பிரசாரம்.
பிரதமரின் அலுவலகம் முடிவு செய்வதை, அமித் ஷா எழுதிக் கொடுப்பதை செய்தி நிறுவனங்கள் வெளியிடுகின்றன. கடந்த 2020 தேர்தலை ஒப்பிடுகையில், கூடுதலாக 72 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். இது நிதீஷ் குமாரை மீண்டும் முதல்வராக்குவதற்கு அல்ல. அரசாங்கத்தை மாற்றுவதற்காக போடப்பட்டது. இது மாற்றத்துக்கான வாக்குகள். அரசாங்க மாற்றம் ஏற்படப் போகிறது.
வாக்கு எண்ணிக்கையைத் தாமதப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். மாவட்டத் தலைமையகத்தில் பதற்றத்தை உருவாக்குவார்கள். இதனால், மக்களிடையே பயம் உண்டாகும். 2020 தேர்தலிலும் மக்கள் மாற்றத்துக்காக தான் வாக்களித்தார்கள். ஆனால், முறைகேடுகள் செய்து, எங்களை வெறும் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்கள். இந்த முறை நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.