ஞானேஷ் குமார் Vs பிகார் மக்கள் இடையே நேரடிப் போட்டி! காங்கிரஸ்
பிகார் வாக்கு எண்ணிக்கையை காங்கிரஸ் விமர்சித்திருப்பது பற்றி...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், பிகார் மக்களுக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த நிர்வாகி பவன் கேரா தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 188 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா கூட்டணி வெறும் 51 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 6 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து செய்தியாளர்களுடன் காங்கிரஸ் செய்தித் தொடர்புத் துறையின் தலைவர் பவன் கேரா பேசியதாவது:
”இது வெறும் தொடக்க எண்ணிக்கை விவரங்கள்தான். சிறிது நேரம் காத்திருந்து பார்க்க வேண்டும். தொடக்க எண்ணிக்கை பிகார் மக்களைவிட ஞானேஷ் குமார் மேலோங்கிச் செயல்படுவதை காட்டுகின்றன. பிகார் மக்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. எஸ்ஐஆர் மற்றும் வாக்குத் திருட்டுக்கு மத்தியிலும் அவர்கள் தங்களின் தைரியத்தைக் காட்டியுள்ளனர்.
நான் காங்கிரஸ், பாஜக, ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையேயான போட்டியைப் பற்றி நான் பேசவில்லை. ஞானேஷ் குமார் மற்றும் பிகார் மக்களுக்கு இடையேயான நேரடிப் போட்டி பற்றி பேசுகிறேன். இனிவரும் நேரங்களில் ஞானேஷ் குமார் எவ்வளவு திறமையாகச் செயல்படுவார் என்பது தெரியும்” எனத் தெரிவித்தார்.
மேலும், விருதுநகர் எம்பியும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடாவுமான மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“பெரும்பாலும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான 65 லட்சம் வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, தேர்தல் முடிவில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
போட்டி தொடங்குவதற்கு முன்பே, விளையாட்டுத் திடல் ஒருதலைபட்சமாக இருந்தால், ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Direct contest between Gyanesh Kumar vs the people of Bihar! Congress
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.