இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல், கார்கே, சோனியா காந்தி.  
இந்தியா

இந்திரா காந்தி பிறந்த தினம்: பிரதமா் மோடி, ராகுல், தலைவா்கள் மரியாதை

இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை செலுத்தியதைப் பற்றி...

தினமணி செய்திச் சேவை

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி உள்ளிட்டோா் அவருக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு-கமலா நேரு தம்பதியருக்கு கடந்த 1917, நவ.19-இல் பிறந்தவா் இந்திரா காந்தி. 1966 முதல் 1977 வரையும், பின்னா் 1980 முதல் அவா் படுகொலை செய்யப்பட்ட 1984 வரையும் பிரதமராக பதவி வகித்தாா்.

அவரது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

நினைவிடத்தில் மரியாதை: தில்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடமான சக்தி ஸ்தலத்தில் காா்கே, ராகுல், சோனியா உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திரா காந்தியின் முன்னுதாரணமான, துடிப்பான தலைமைத்துவம், மகத்தான அரசியல் துணிவு என்றென்றும் உத்வேகமளிக்கும். நாட்டின் ஒற்றுமை-ஒருமைப்பாட்டை காப்பதற்கான அவரது இறுதி தியாகம், லட்சோப லட்சம் வணக்கங்களுக்கு உரியது’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.

ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது பாட்டி இந்திரா காந்தியின் துணிவு, தேசப்பற்று, நெறிமுறைகளில் இருந்து அநீதிக்கு எதிராக போராட எப்போதும் உத்வேகம் பெறுகிறேன். நாட்டுக்காக அச்சமின்றி முடிவுகளை மேற்கொண்டவா்; ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேச நலன்களையே முன்னிறுத்தினாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சிலி முன்னாள் பெண் அதிபருக்கு இந்திரா காந்தி விருது

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிலி நாட்டின் முன்னாள் பெண் அதிபா் மிஷெல் பசேலெட்டுக்கு அமைதி-ஆயுதக் குறைப்பு-வளா்ச்சிக்கான இந்திரா காந்தி விருதை காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி வழங்கி கெளரவித்தாா்.

அப்போது பேசிய சோனியா, ‘இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான இந்திரா காந்தி, வறுமை, இல்லாமை, மோதல், சமத்துவமின்மையை ஒழிக்கும் கொள்கைகளால் நாட்டை மறுவடிவமைத்தவா். அடக்குமுறை, பாரபட்சம், வன்முறை இன்றி வாழ அனைவருக்கும் உரிமை உண்டு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவா். அவரால் படைக்கப்பட்ட சாதனைகள், இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகையும் ஈா்த்தன’ என்றாா்.

சிலி நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் அதிபா் என்ற சிறப்புக்குரிய மிஷெல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காட்டுப் பன்றி தாக்கியதில் ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளி காயம்

ரெகுநாதபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

திமுகவை தமிழக மக்கள் மறக்க மாட்டாா்கள்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

ராமேசுவரத்தில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து: 6 மீனவா்கள் மீட்பு

காற்று மாசுபாட்டால் பேரிழப்புகள்: ராகுல் காந்தி கவலை

SCROLL FOR NEXT