அரசியலில் இல்லையென்றால் விண்வெளி தொழில்முனைவோராக இருந்திருப்பேன்: ராகுல்
அரசியல்வாதி அல்ல, விண்வெளி ஆர்வலன்.. ராகுல் காந்தி
அரசியலில் இல்லையென்றால் விண்வெளி துறையில் தொழில்முனைவோராக இருந்திருப்பேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
கேரளம் வந்துள்ள ராகுல் காந்தி டெக்னோ பார்க்கில் தகவல் தொழில்நுட்ப இளைஞர்களுடன் கலந்துரையாடினார். உரையாடலின்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு ராகுல் பதிலளித்தார்.
பலரால் தன்னை ஒரு அரசியல்வாதி என்று வரையறுக்கப்பட்டதாகவும், ஆனால் உண்மையில் அவர் வேறு பல விஷயங்களைச் செய்வதாகவும் கூறினார். ஒருவரை அரசியல்வாதி, தொழில்நுட்ப வல்லுநர், பொறியாளர் என்று அழைப்பது சுருக்கமான வரையறைகள் என்று தான் கருதுவதாகக் கூறினார்.
நான் அரசியலில் ஈடுபடவில்லை எனில், விண்வெளி உலகில் தொழில்முனைவோராக இருந்திருப்பேன். நான் ஒரு விமானி, என் தந்தை மற்றும் மாமாவும் கூட என்று அவர் கூறினார்.
நாம் எல்லாவற்றையும் பற்றி ஆர்வமாக இருக்க வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் பற்றித் திறந்த மனதுடன் இருக்க வேண்டும், அப்போதுதான் புள்ளிகளை இணைக்கத் தொடங்குவீர்கள், இலக்கை அடைய முடியும் இவ்வாறு அவர் கூறினார்.
கேரளத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் உள்ள ஸ்ரீ நாராயண குருவின் சமாதியைப் பார்வையிட்டார். இடுக்கியில் உள்ள குட்டிக்கானத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.