வீட்டிலிருந்தே ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை மாற்றலாம்! எப்படி?
வீட்டிலிருந்தே ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை மாற்றும் புதிய வசதி விரைவில் வரவிருக்கிறது.
ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு வசதியை ஆதார் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அது விரைவில் பயன்பாட்டுக்கும் வரவிருக்கிறது.
அதுதான், ஆதார் சேவை மையங்களுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே, ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணை, பயனர்கள் மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு.
ஆதார் ஆணையம், அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில், ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திராமல், ஒருவர் வீட்டிலிருந்தே, செல்போன் எண்ணை ஓடிபி மற்றும் முக அடையாளச் சான்று மூலம் மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் வரவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களும், இந்த புதிய வசதியை பரிசோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்து எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த கருத்துகளை மின்னஞ்சல் வாயிலாக பகிரவும் ஆதார் ஆணையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
பொதுவாக, ஆதார் சேவை மையத்தில் மக்கள் அதிகம் வருவது செல்போன் எண் மாற்றம் செய்வதற்காகத்தான். இதற்கு, செல்போன் எண்ணை மாற்றும் நபர் நேரில் வர வேண்டும்.
எனவே, ஆதார் ஆணையம், செல்போன் எண்ணை வீட்டிலிருந்தே மாற்றும் வசதியை ஏற்படுத்த முடிவு செய்து, பரிசோதனை முறையில் உள்ளது.
இதன் மூலம் ஆதார் சேவை மையங்களில் மிகப்பெரிய அளவில் கூட்டம் குறையும் என்றும், இதனால், முக்கிய மாற்றங்களுக்காக வருவோருக்கு வரிசையில் நிற்கும் நேரம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைக்கு, ஆதார் பயனர்கள், தங்களது முகவரியை மட்டுமே ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். தற்போது, ஆதார் ஆணையம் உருவாக்கி வரும் செயலி மூலம், ஒருவர் தங்களது செல்போனில் ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து அதிலிருந்த பல முக்கிய விவரங்களை திருத்தம் செய்து கொள்ளலாம். அந்த செயலி முக அடையாளத்தை உறுதி செய்யும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
A new facility to change the mobile phone number on the Aadhaar card from home is coming soon.
இதையும் படிக்க.. பயங்கரவாதத் தொடர்பு! முதியவர்களை குறிவைக்கும் சைபர் மோசடிகள்!