கேரளத்தில் ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் தொல்லை? பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை!
ஆர்எஸ்எஸ் முகாம்களில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - இளைஞர் தற்கொலை!
ஆர்எஸ்எஸ் மையத்தில் கேரள இளைஞர் ஒருவருக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே தொடர்ந்து பாலியல் தொல்லையளிக்கப்பட்டதால் அவர் மனநலன் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
கேரளத்தின் கோட்டயம் அருகேயுள்ள கஞ்சிரப்பள்ளியை பூர்வீகமாகக் கொண்ட 26 வயதான அனந்து அஜியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு சுற்றுலா விடுதியில் கடந்த வியாழக்கிழமை (அக். 9) மீட்கப்பட்டது.
அனந்துவின் உடலைக் கைப்பற்றி, முதல் தகவல் அறிக்கை பதிந்து வழக்கை விசாரிக்கும் கேரள போலீஸார், தடயவியல் துறை உதவியுடன் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த நிலையில், அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவுகளின் மூலம் தற்கொலைக்கான முக்கிய காரணங்கள் கிடைத்துள்ளன.
இன்ஸ்டாவில் அனந்து பகிர்ந்துள்ள தகவல்கள்:
அனந்துவின் தற்கொலைக் குறிப்பு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், ஆர்எஸ்எஸ் முகாம்களில் தனக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் முகாம்கள் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்றபோது தானும் அவற்றில் பங்கேற்றதாகவும், தனக்கு மிக நெருக்கமான அண்டை வீட்டிலுள்ள ஒரு சகோதரர் தன்னுடன் பங்கேற்ற அந்த முகாம்களில் தன்னை பாலியல் கொடுமைப்படுத்தியதாக அனந்து குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பலரால் தான் 4 வயதிலிருந்தே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், தன்னைப் போன்றே, குழந்தைகள் பலரும் ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டு’ அனந்து பெற்றோர்களை எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து ஓசிடி எனப்படும் மனநலப் பிரச்சனையால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, இந்திய ஜனநாயக இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் வி. கே. சநோஜ் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், ‘ஆர்எஸ்எஸ் அமைப்பின் மனிதத்தன்மையற்ற முகம் இச்சம்பவம் வெளிச்சம்போட்டு காட்டிகிறது. அங்குள்ள கிரிமினல் சக்திகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
[தற்கொலை தவறு; தவிர்க்கப்பட வேண்டியது - தற்கொலை எண்ணம் தோன்றினால் மனநல ஆலோசனை மையத்தை 044-24640050 என்ற எண்ணில் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்]