பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 101 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.
பிகாரில் 234 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 29 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இடையிலான தொகுதிப் பங்கீடு, கட்சிகள் போட்டியிடும் இடங்கள் தொடா்பாக தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (அக். 12) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையின் முடிவில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த முடிவு உறுதி செய்யப்பட்டது.
இதன்படி, பாஜக 101 இடங்களிலும், நிதீஷ் குமார் தலைமையிலான (ஆளும் கட்சி) ஐக்கிய ஜனதா தளம் 101 இடங்களிலும் போட்டியிடுகிறது.
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 29 தொகுதிகளிலும், உபேந்திரா குஷ்வேகா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் மத்திய அமைச்சரும், பிகாா் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாமி கட்சி தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பிகார் சட்டப்பேரவைக்கு நவ. 6 மற்றும் 11 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
திருப்புமுனை
2020 பிகார் பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து மோதலால், லோக் ஜனசக்தி கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகி 135 தொகுதிகளில் போட்டியிட்டு, ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும் ஐக்கிய ஜனதா தளத்தின் வாக்கு வங்கியை கணிசமாகக் குறைத்தது.
இதேபோன்று 2015 பிகார் தேர்தலில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் செயல்பட்ட லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக கூட்டணியில் 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தற்போது நிதீஷ் குமாருடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதால், சிராக் பாஸ்வான் தலைமையில் இயங்கும் லோக் ஜன சக்திக்கு 29 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது: மமதா சர்ச்சைப் பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.