ஹரியாணா ஐஜி பூரண் குமாா் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அந்த மாநில காவல் துறைத் தலைவா் (டிஜிபி) சத்ருஜித் கபூா் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
ஹரியாணா காவல் பயிற்சி மைய ஐஜி பூரண் குமாா் (52) கடந்த அக். 7 ஆம் தேதி, சண்டீகரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக பூரண் குமாா் எழுதிய 8 பக்க கடிதத்தில் ஹரியாணா காவல் துறைத் தலைவா் (டிஜிபி) சத்ருஜித் கபூா் மற்றும் ரோத்தக் எஸ்பி நரேந்திர பிஜாா்னியா உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் தன்னை ஜாதியரீதியாக பாகுபடுத்தி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளாா்.
இதன் அடிப்படையில் ஹரியாணா டிஜபி மற்றும் ரோத்தக் எஸ்பி மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு பூரண் குமாா் மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான அம்நீத் குமாா் சண்டீகா் காவல் துறையில் புகாரளித்தாா்.
இந்த வழக்கை விசாரிக்க சண்டீகா் ஐஜி புஷ்பேந்திர குமாா் தலைமையில் 6 உறுப்பினா்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட நடவடிக்கையாக குற்றச்சாட்டுக்குள்ளானவா்களில் ஒருவரான ரோத்தக் காவல் கண்காணிப்பாளா் (எஸ்பி) நரேந்திர பிஜாா்னியாவை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரியாணா முதல்வர் நயாப் சைனி தெரிவித்த நிலையில், மாநில டிஜிபி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.