தில்லியில் படித்த கல்லூரிக்கு நேரில் சென்ற இலங்கை பிரதமர்!
தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு இலங்கை பிரதமர் நேரில் சென்றது குறித்து...
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, அவர் படித்த தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு இன்று (அக். 16) நேரில் சென்றுள்ளார்.
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பின்பு முதல்முறையாக இந்தியா வந்துள்ள அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உரையாடினார்.
இந்த நிலையில், தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில், கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1994 வரை, சமூகவியல் பட்டப்படிப்பு பயின்ற பிரதமர் அமரசூரிய, இன்று அக்கல்லூரிக்கு நேரில் சென்றபோது மாணவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்து கல்லூரி முதல்வர் அஞ்சு ஸ்ரீவஸ்தவா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் அவர் உரையாடினார்.
முன்னதாக, வரும் அக்.18 ஆம் தேதி வரையிலான பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்தப் பயணத்தில், இருநாடுகளுக்கு இடையிலான முக்கிய துறைகளின் ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: குஜராத்: 16 அமைச்சர்கள் ராஜிநாமா!