சமோசா வாங்க கட்டாயப்படுத்தப்படும் பயணிகள்! எந்த ரயில் நிலையம் தெரியுமா?
சமோசா வாங்குவதற்காக பயணிகள் கட்டாயப்படுத்தப்படும் விடியோ வைரலானது குறித்து...
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபால்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் சமோசா வாங்குவதற்கு கட்டாயப்படுத்தப்படும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ரயில் பயணங்களின்போது பல தருணங்கள் மறக்க முடியாதவையாக மாறுவது வழக்கம். பல மனிதர்கள், வியாபாரிகள், விதவிதமான உணவு வகைகள், ரயில் நிலையங்கள் எனப் பலவற்றைப் பயணிகள் கடந்து செல்வார்கள்.
ஆனால், மத்தியப் பிரதேசத்திற்குட்பட்ட ரயில் நிலையத்தில் நடந்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பயணிகள் இறங்குவதற்காக ஜபால்பூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்களுக்கு ரயில் நின்றுள்ளது.
அப்போது ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர், ரயில் நிலைய விற்பனையாளரிடம் சமோசா வாங்கியுள்ளார்.
அதற்குரிய தொகையை இணையப் பரிவத்தனை செய்யும்போது இயந்திரக் கோளாறால் பணம் செலுத்த முடியவில்லை. தொடர்ந்து பணம் செலுத்த முயன்றபோது, ரயில் புறப்பட்டதால், சமோசாவை கொடுத்துவிட்டு ரயில் ஏற முயன்றுள்ளார்.
எனினும் ரயில் நிலைய விற்பனையாளர், வாடிக்கையளரின் சட்டையைப் பிடித்துக்கொண்டு சமோசா வாங்க கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்குரிய தொகையையும் கேட்டுள்ளார். ரயிலைத் தவற விடக்கூடாது என்பதற்காக தன்னிடமிருந்த கைக்கடிகாரத்தை கழற்றிக் கொடுத்துள்ளார் பயணி. இந்த விடியோ அங்கிருந்த மற்றொரு பயணியால் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடியோ பலரால் பகிரப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில்வே காவல் துறையினரின் மூலம் சமோசா விற்பனையாளர் கைது செய்யப்பட்டு அவரின் உரிமத்தையும் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
ரயில் நிலைய விற்பனையாளர்களால் பயணிகள் அவதியுறும் இந்த விடியோவில் பலரும் தங்களுக்கு நேர்ந்த துயரமான ரயில் நிலைய அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ஆமிர் கான், அக்ஷய் குமார் வாங்கிய காரை பரிசளித்துக்கொண்ட யூடியூபர்!