காஸா குறித்த அவதூறு பதிவு! பிரபல இயக்குநருக்கு வலுக்கும் கண்டனம்!
பிரபல பாலிவுட் இயக்குநரின் கருத்துக்கு கண்டனம் வலுத்து வருகின்றது...
காஸா குறித்து பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்ட அவதூறு பதிவுக்கு, ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய “சிவா”, “சத்யா” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகின்றார்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையன்று காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் சந்திக்கும் வன்முறைகளைக் கேலி செய்யும் விதமாக அவர் வெளியிட்ட பதிவு மிகவும் விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.
கடந்த, அக்.20 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவில் ஒரு நாள் மட்டுமே தீபாவளி, காஸாவில் எல்லா நாளும் தீபாவளி” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, ஏராளமான இணையவாசிகள் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த, 2022 ஆம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்ட அவதூறு பதிவுக்கு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியான அதர்வாவின் தணல்!