கோவை மாவட்டம் வாளையாறு அருகே கேரளம் நோக்கி காரில் ரூ.2.54 கோடி ஹவாலா பணத்தை கடத்திச் சென்ற ராஜஸ்தான் மாநில இளைஞரை கேரள சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை வழியாக கேரளத்துக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வாளையாறு சுங்கச்சாவடி அருகே சுங்கத்துறை ஆய்வாளர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையிலிருந்து கேரளம் நோக்கி வந்த கார் ஒன்றை சுங்க அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது காரில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த 2.54 கோடி பணத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவானி சிங் (33) என்ற இளைஞரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்த பணம் பாலக்காட்டில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து கேரள சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.