முகப்பு
இந்தியா

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

புதின் - மோடி இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை பற்றி...

Updated On : 1 செப்டம்பர், 2025 at 7:59 AM
புதினுடனான சந்திப்பில் மோடி
பகிர்:

மிகவும் கடினமான சூழலிலும் இந்தியாவும் ரஷியாவும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளதாக ரஷிய அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இன்று காலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் ஒரே காரில் புறப்பட்டு இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் அரங்குக்குச் சென்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது மோடி பேசியதாவது:

”புதினைச் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். பல விஷயங்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ள எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பல உயர்நிலை சந்திப்புகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உங்களை வரவேற்க 140 கோடி இந்தியர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளார்கள்.

மிகவும் கடினமான சூழ்நிலைகளில்கூட இந்தியாவும் ரஷ்யாவும் எப்போதும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளன. இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கும் நமது நெருங்கிய உறவு முக்கியமானது.

உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். அமைதிக்கான சமீபத்திய முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக முன்னேறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து நீடித்த அமைதியை நிலைநாட்ட ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இது முழு மனிதகுலத்தின் விருப்பம்.” எனத் தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்த மோடி, ”வர்த்தகம், உரங்கள், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Prime Minister Modi said in a bilateral meeting with the Russian President that India and Russia have stood shoulder to shoulder in the most difficult circumstances.

முழு கட்டுரையைப் படிக்க →