பாகிஸ்தானும் பங்கேற்ற எஸ்சிஓ மாநாட்டில் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம்!
பஹல்காம் தாக்குதலுக்கு எஸ்சிஓ தலைவர்கள் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்...
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவுள்ள 10 நாடுகளின் தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபும் ஒருவர். அவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்திய பிரதமா் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சார்பில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.
அதில், ”ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஷாங்காய் உறுப்பு நாடுகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது. பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல் நடத்தியவர்கள், நிதி மற்றும் ஆதரவு அளித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.