பஹல்காம் தாக்குதல்! உறுதியளிக்கப்பட்ட அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் கொல்லப்பட்டவரின் மகள்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகள் பல மாதங்களாக அரசுப் பணிக்காகக் காத்திருப்பது குறித்து..
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சந்தோஷ் ஜக்தாலேவின் குடும்பத்துக்கு உறுதியளிக்கப்பட்ட அரசுப் பணி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில், சந்தோஷ் ஜக்தாலே உள்பட மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசுப் பணி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உறுதியளித்திருந்தார்.
Advertisement
இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்று 10 மாதங்களைக் கடந்த பின்னரும் தங்களது குடும்பத்துக்கு உறுதியளிக்கப்பட்ட அரசுப் பணி வழங்கப்படவில்லை என சந்தோஷ் ஜக்தாலேவின் மகள் அசாவரி ஜக்தலே கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“எங்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டு 10 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால், எந்தவொரு பதிலும் இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. இதற்காக, நான் பல அமைச்சர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்துள்ளேன். ஆனால், அவர்களிடமிருந்து எந்தவொரு பதிலுமில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அசாவரி ஜக்தலேவுக்கு அரசுப் பணி வழங்குமாறு மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புணே மாநகராட்சிக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இதுவரை எந்தவொரு பணி ஆணையும் தனக்கு வழங்கப்படவில்லை என அசாவரி ஜக்தலே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.