இந்தியா

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை - பியூஷ் கோயல்

அமெரிக்காவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி, செப். 10: அமெரிக்காவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்திய தொழில், வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பங்கேற்றாா்.

அப்போது பேசிய அவா், ‘ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு நாடுகள் (ஐஸ்லாந்து, நாா்வே, ஸ்விட்சா்லாந்து, லிக்டென்ஸ்டைன்), மோரீஷஸ், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்கெனவே இறுதி செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் விரிவான வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என நம்புகிறோம். ஓமன் உடனான வா்த்தக ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அமெரிக்கா, நியூஸிலாந்துடனும் தீவிர பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளோம்’ என்றாா்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது. இப்போது விரிவான ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்த இந்த வரியால், இறால், ஜவுளி, தோல், காலணிகள் உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

191 பில்லியன் டாலா் வா்த்தக மதிப்புடன் இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக உள்ள அமெரிக்கா, நாட்டின் மூன்றாவது பெரிய முதலீட்டாளா் ஆகும். கடந்த 2000, ஏப்ரல் முதல் 2025, ஜூன் வரை அமெரிக்காவில் இருந்து 76.26 பில்லியன் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் அமெரிக்காவின் பங்கு 10 சதவீதமாகும். அமெரிக்கா உச்சபட்ச வரிவிதிப்பை மேற்கொண்டுள்ளதால், பிற நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகளை இந்தியா விரைவுபடுத்தியுள்ளது.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT