நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!
நேபாளத்தில் இருந்து 2,000 இந்தியர்கள் நாடு திரும்பியது குறித்து...
நேபாளத்தில் வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் மேற்கு வங்கத்தின் பனிடான்கி எல்லை வழியாகத் தாயகம் திரும்பியுள்ளனர்.
நேபாள நாட்டில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டது மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து, ஜென் - ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த செப்.9 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில், அரசுப் படைகள் நடத்திய தாக்குதல்களினால் வன்முறை வெடித்தது. இதனால், பிரதமர் சர்மா ஓலி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டு, நிர்வாகம் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
Advertisement
இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய அரசு கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களினால், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், நேபாளத்தில் இருந்த தொழிலாளிகள் மற்றும் சுற்றுலா சென்றிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 3 நாள்களில் மட்டும் மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் உள்ள பனிடாங்கி எல்லை வழியாக நேபாளத்தில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், நேபாளத்தில் சிக்கியுள்ள தெலுங்கு மக்களை மீட்க ஆந்திரப் பிரதேச மாநில அரசு சிறப்பு விமானங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நேபாள வன்முறையை ஆவணமாக்கிய பிரிட்டன் காணொளிப் பதிவர்..! வரலாறான சுற்றுப் பயணம்!