ஆர்மீனியா வழியாக ஈரானில் இருந்து நாடு திரும்பும் 100 இந்திய மாணவர்கள்!
ஈரானில் இருந்து 100 இந்திய மாணவர்கள் நாடு திரும்புவது குறித்து...
ஈரானில் இருந்து ஆர்மீனியா வழியாக 100 இந்திய மாணவர்கள் தாயகம் வந்தடையவுள்ளதாக, ஜம்மு - காஷ்மீர் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஈரானில் சிக்கியுள்ள சுமார் 100 இந்திய மாணவர்கள் ஆர்மீனியா நாட்டின் வழியாக இந்தியா வந்தடைவார்கள் என ஜம்மு - காஷ்மீர் மாணவர் அமைப்பு புதன்கிழமை (மார்ச் 11) தெரிவித்துள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, ஈரானின் எல்லையைக் கடந்து ஆர்மீனியா வந்தடையும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வரும் மார்ச் 14 மற்றும் மார்ச் 15 ஆகிய தேதிகளில் பயணிகள் விமானம் மூலம் தில்லி வந்தடைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இந்த விமானங்கள் துபை வழியாக தில்லிக்கு இயக்கப்படும் எனவும், ஈரானில் இருந்து ஆர்மீனியா வருவதற்கு உதவுமாறு மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈரானில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதற்கு மத்திய அரசின் தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ திட்டங்களும் அறிவிக்கப்படாததால், மாணவர்கள் அனைவரும் பயணிகள் விமானங்கள் மூலம் நாடு திரும்புவது குறிப்பிடத்தக்கது.