மே. வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் வன்முறைக்கு வாய்ப்பு! வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!
வாக்குப்பதிவு நாளில் வன்முறை ஏற்படலாம்: வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும் - பிரதமர் மோடி பிரசாரம்
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நாள்களில் ஆளுங்கட்சியினரால் வன்முறை ஏற்படலாம். ஆயினும், வாக்காளர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் பிரசாரத்தை கூச் பிகாரில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி இன்று (ஏப். 5) தொடங்கிவைத்தார்.
கூச் பிகார் பகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி முக்கிய அறிவுரையொன்றை வழங்கினார்.
Advertisement
அவர் பேசியதாவது : “வாக்குப்பதிவு நாளில் திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களிடமிருந்து வாக்காளர்கள் ஏராளமான அழுத்தத்தை எதிர்கொள்வார்கள். அன்றைய நாளில் வாக்காளர்கள் தங்களைச் சுற்றி வன்முறை ஏற்படுவதையும் பார்க்க நேரிடும். ஆயினும், வாக்காளர்கள் சட்டத்தின் மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்காமல் திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள் ஏற்படுத்தும் தடைகளையும் கடந்து சுதந்திரமாக வாக்கு செலுத்துங்கள்” என்றார்.