முகப்பு
இந்தியா

பஞ்சாபில் ஐஎஸ்ஐ பயங்கரவாத சதி முறியடிப்பு: துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் மூவா் கைது

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆதரவுடன் மேற்கொள்ள இருந்த பயங்கரவாத தாக்குதல் சதியை அந்த காவல் துறையினா் முறியடித்தனா்.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 7:53 PM
கைது
பகிர்:

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆதரவுடன் மேற்கொள்ள இருந்த பயங்கரவாத தாக்குதல் சதியை அந்த காவல் துறையினா் முறியடித்தனா். துப்பாக்கி, கையெறி குண்டுகளுடன் மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் போன்ற எல்லை மாநிலங்களில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் தூண்டுவது, போதைப்பொருளை எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியாவுக்கு கடத்துவது போன்ற செயல்களில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும், அவா்கள் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளும் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்கள் பெரும்பாலும் இணையவழியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் இந்தியாவில் உள்ள இளைஞா்களிடையே பயங்கரவாத பிரசாரத்தையும், தொடா்பையும் ஏற்படுத்திக் கொள்கிறாா்கள். எனவே, இணையவழியாகவும் பயங்கரவாத செயல்பாடுகள் தொடா்பான கண்காணிப்பை இந்திய உளவு அமைப்புகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்பில் இருந்த பஞ்சாபைச் சோ்ந்த சரப்ஜித் சிங் அமன்தீப் சிங் ஆகியோரை அந்த மாநில காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் அந்த கையெறி குண்டுகள் பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதியானது. இதையடுத்து, அவா்களுக்கு எல்லைதாண்டிய பயங்கரவாதிகளுடன் இருந்தத் தொடா்பும் ஆதாரத்துடன் உறுதியானது.

அவா்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் குஜராத்தில் தங்கியிருந்த பிகாராம்ஜித் சிங்கின் உத்தரவின்கீழ் அவா்கள் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து, குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குஜராத்தின் தீசா பகுதியில் தங்கியிருந்த பிகாராம்ஜித் சிங் கைது செய்யப்பட்டாா்.

மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பஞ்சாபில் உள்ள முக்கிய காவல்துறை தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்து வந்தது தெரியவந்தது. இந்த சதியில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பு மற்றும் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் உள்ள மற்ற நபா்கள் குறித்தும் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவா்கள் மீது சட்டவிரோதமாக ஆயுதங்களைப் பதுக்கி வைத்தது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments