ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும்: ஹிமந்த பிஸ்வ சர்மா!
மாநிலத்தை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல வாக்களிக்குமாறு வேண்டுகோள்..
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து, மாநிலத்தை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
722 வேட்பாளர்களின் தேர்தல் விதியைத் தீர்மானிக்கும் வகையில், அஸ்ஸாமின் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேவேளையில், 2016-ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த காங்கிரஸ், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்று வருகிறது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சிறந்த அஸ்ஸாம் மாநிலத்தைக் கட்டமைக்கும் பாதையில், ஒவ்வொருவரின் குரலும் ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
Advertisement
ஜனநாயகத்தின் திருவிழாவாகத் திகழும் இந்தத் தருணத்தில், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், அஸ்ஸாம் மாநிலத்தை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லவும், அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்துகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஹிமந்த சர்மா, குவாஹாட்டியில் உள்ள ஜலுக்பாரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இன்று நடைபெறும் தேர்தலின் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றது.