மமதா அரசு மத்திய திட்டங்களைத் தடுக்கிறது: பாஜக எம்பி குற்றச்சாட்டு!
மமதா அரசின் பழிவாங்கும் அரசியல் பற்றி பாஜக எம்பி கூறுவது..
திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான மேற்குவங்க அரசு, பழிவாங்கும் அரசியல் காரணமாக மத்திய சமூக நலத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதாக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் சாமிக் பட்டாச்சார்யா கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
மேலவையில் பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய பட்டாச்சார்யா,
திரிணமுல் காங்கிரஸ் அரசு மேற்கொள்ளும் பழிவாங்கும் அரசியல் காரணமாக மேற்கு வங்கத்தில் ஏழை மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் மத்திய அரசின் திட்டங்களை இழந்துள்ளனர்.
பல்வேறு சமூக நலத் திட்டங்களைத் திரிணமுல் காங்கிரஸ் அரசு தடுப்பாகக் குற்றம் சாட்டிய அவர், இது நாட்டின் கூட்டாட்சி அமைப்பு மீதான நேரடித் தாக்குதல் என்றார்.
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா, ஜன் தன் யோஜனா, ஃபசல் பீமா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்ற மத்திய திட்டங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்படவில்லை.
பழிவாங்கும் அரசியல் காரணமாக மாநில அரசு சுமார் 43 ரயில்வே திட்டங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக பட்டாச்சார்யா குற்றம் சாட்டினார். அதோடு, மாநிலத்தில் நீதித்துறையும் தாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
திரிணமுல் காங்கிரஸ் அரசு எதிர்ப்பதற்காகவே எதிர்க்கிறது என்றும், ஏழைகள், விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் நன்மைகளை மறுத்துவருவதாகவும் அவர் கூறினார்.
பாஜக எம்.பி. அவையில் இந்த விவகாரத்தை எழுப்பியபோது, திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.