எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை இன்றும் முடக்கம்!
எதிர்க்கட்சிகள் அமளியைத் தொடர்ந்து மக்களவை முடங்கியது பற்றி...
எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக வாரத்தின் முதல் நாளான இன்று மக்களவை முடங்கியுள்ளது.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சிகள் மக்களவையை முடக்கினர்.
இந்த நிலையில், மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியவுடன் யு-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Advertisement
தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கவிருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
மீண்டும் பகல் 12 மணிக்கும் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே கடந்த வாரம் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.