பிகார் சட்டப்பேரவையில் தனது கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில் திருப்தியில்லை என்று அலிநகர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவும் பாடகியுமான மைதிலி தாகூர் விமர்சித்துள்ளார்.
ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த இளம் எம்எல்ஏ அமைச்சரின் பதிலை விமர்சித்தது பிகார் பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலிநகர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட குராசன் நதியாம் அரசு மருத்துவமனையின் கட்டடம் நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற தன்மையில் இருப்பதாக மைதிலி தாகூர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் மங்கள் பாண்டே, பழுது பார்க்கப்படும் என்று குறிப்பிட்டதற்கு மைதிலி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது பேசிய மைதிலி, ”கட்டடம் மோசமான நிலையில் இல்லை, பழுதுபார்ப்பு மட்டுமே தேவை என்று அமைச்சர் கூறியுள்ளார். நான் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளேன். கட்டடம் முற்றிலும் பாழடைந்துள்ளது. முழு மருத்துவமனையும் ஒரு சிறிய அறையில் மட்டுமே இருக்கிறது. அமைச்சரின் பதிலில் எனக்கு முழுத் திருப்தியில்லை.
எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ பதிவுகள் கூறினாலும், உண்மை முற்றிலும் எதிர்மாறானது. முன்னர், இரண்டு எம்பிபிஎஸ் மருத்துவர்களைக் கொண்டு இயங்கிய இந்த மருத்துவமனை, தற்போது முற்றிலும் பயிற்சி மருத்துவர்கள் மூலம் இயங்குகிறது. கிட்டத்தட்ட 40,000 முதல் 50,000 மக்களுக்கு சேவை செய்யும் பகுதிக்கு குறைந்தது இரண்டு எம்பிபிஎஸ் மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்
அலிநகர் மற்றும் கன்ஷ்யாம்பூருக்கு இடையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, முறையாக மேம்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கானோருக்கு முக்கியமான சுகாதார அணுகலை வழங்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
25 வயதான மைதிலி தாகூர், கடந்த பிகார் தேர்தலில் அலிநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்றவர். பிகார் சட்டப்பேரவையின் இளம் எம்எல்ஏ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.