பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தில், ஒரே நாளில் 16 தனியார் பள்ளிகளுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
மொஹாலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 16 தனியார் பள்ளிகளுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புதன்கிழமை (பிப். 11) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளிகப்பட்டது. காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி அந்தப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்தப் பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகளின் முடிவில், 16 பள்ளிகளின் வளாகங்களில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருள்களும் கிடைக்காததால் இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என உறுதி செய்யப்பட்டன.
இந்தச் சோதனை நடவடிக்கைகளில் 300-க்கும் அதிகமான காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டதாகவும், மிரட்டல் விடுத்த மர்ம நபர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மொஹாலி காவல் துறை உயர் அதிகாரி ஹர்மந்தீப் சிங் ஹான்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.