முகப்பு
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே ராணுவ ஹெலிகாப்டரில் பறந்த குடியரசுத் தலைவா்

ராஜஸ்தானில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பிரசண்ட் இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டரில் துணை விமானியாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை பறந்தாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:48 AM
இலக்கை நோக்கி ஏவுகணையைச் செலுத்திய விமானப் படை ஹெலிகாப்டர்.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:25 PM

ராஜஸ்தானில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பிரசண்ட் இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டரில் துணை விமானியாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை பறந்தாா்.

பொக்ரானில் மாலையில் நடைபெற்ற விமானப் படையின் போா்ப் பயிற்சியான ‘வாயு சக்தி’யை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கண்டு ரசித்தாா்.

ஜெய்சால்மா் மாவட்டத்தில் உள்ள விமானப் படைத் தளத்துக்கு காலையில் வந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் வரவேற்றாா்.

Advertisement

விமானி உடையில் இருந்த குடியரசுத் தலைவரிடம் பிரசண்ட் ஹெலிகாப்டா் குறித்து கேப்டன் விளக்கினாா். பின்னா், மேலே எழுந்த ஹெலிகாப்டா், பொக்ரான் ஆயுத சோதனை தளத்துக்கு மேலே 25 நிமிஷங்களுக்குப் பறந்தது.

இந்தப் பயணம் தொடா்பாக முப்படைகளின் தலைவரான திரெளபதி முா்மு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘உள்நாட்டுத் தயாரிப்பின் சக்திவாய்ந்த அடையாளமாக பிரசந்த் ஹெலிகாப்டா் உள்ளது. தற்போது, ஜெய்சல்மாா் மாவட்டத்துக்கு மேலாகப் பறந்துகொண்டிருக்கிறேன். நம்முடைய துணிச்சல் மிக்க வீரா்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்’ என்றாா்.

பிரசண்ட் ஹெலிகாப்டரில் பயணித்ததன் மூலம் தாக்குதல் நடத்தும் திறன் ஹெலிகாப்டரில் பயணித்த முதல் குடியரசுத் தலைவா் என்ற பெருமையைப் பெற்றாா் திரெளபதி முா்மு.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் ஹரியாணாவின் அம்பாலா விமானப் படைத் தளத்திலிருந்து ரஃபேல் போா் விமானத்தில் திரெளபதி முா்மு பயணித்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தின் தேஜ்பூா் விமானப் படைத் தளத்திலிருந்து கடந்த 2023, ஏப்ரலில் சுகோய்-30 எம்கேஐ போா் விமானத்தில் அவா் பயணித்துள்ளாா்.

இலகு ரக ஹெலிகாப்டரான பிரசண்ட் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ஹெலிகாப்டராகும். இதை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

எதிரி படையினரால் கண்டறிய முடியாதது மற்றும் இரவில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டரில் இருந்து வானிலிருந்து நிலத்துக்கும், வானில் உள்ள பிற இலக்குகளையும் நோக்கி ஏவுகணைகள், ராக்கெட்டுகளை செலுத்த முடியும். மேலும், 20 மி.மீ. துப்பாக்கியும் இந்த ஹெலிகாப்டரில் உள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:46 AM

‘வாயு சக்தி’ போா்ப் பயிற்சி:

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் போா்ப் பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய விமானப் படையின் ‘வாயு சக்தி’ போா்ப் பயிற்சியின்போது பகலிலும் இரவிலும் படையின் தாக்குதல் திறன், ஆயுத வலிமை, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பயன்பாடு, பதிலடித் திறன் ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை தெரிவித்தது.