பாஜக ஆட்சியில் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்: அமித் ஷா
கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜக ஆட்சி மட்டுமே சாத்தியம்: மத்திய அமைச்சர் அமித் ஷா
கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜக ஆட்சி மட்டுமே சாத்தியம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பாஜக கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், "உலகெங்கிலும் கம்யூனிசம் முடிவுக்கு வந்துவிட்டது; அதேபோல, இந்தியா முழுவதும் காங்கிரஸும் முடிவுக்கு வந்துவிட்டது.
பாஜக ஆட்சியில் மட்டுமே கேரளத்தின் வளர்ச்சி சாத்தியமாகும். எல்டிஎஃப் - யுடிஎஃப் கூட்டணியால், கேரளம் முன்னெப்போதும் இல்லாதவகையில் தேக்க நிலையை அடைந்துள்ளது. அவர்களின் கூட்டணி, ஊழலை அடிப்படையாகக் கொண்டது. மேலும், ஊழல்வாதிகளையும் அவர்கள் பாதுகாக்கின்றனர்.
கேரளத்தில் எழுச்சி பெறுவது கடினமாக இருந்தது. எங்களிடம் அதிகாரம் இல்லை; கொள்கைக்காக வேலைசெய்யும் தொண்டர்கள் மட்டுமே இருந்தனர். எங்கள் நம்பிக்கையை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கேரளத்தில் பாஜக தொண்டர்கள் வலுவாக நின்று, வெற்றியும் பெற்றனர்.
கேரளத்தில் அரசாங்கத்தை அமைப்பது மற்றும் தேச விரோத சக்திகளிடமிருந்து கேரளத்தை காப்பது மட்டுமே எங்கள் தீர்மானம். கேரளத்துக்கு எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃபால் வளர்ச்சியைக் கொண்டுவர முடியாது என்பது மக்களுக்குத் தெரியும்.
கேரளத்தில் பாஜக முதல்வரைப் பார்க்கும் நேரம் நாளை வரும்." என்று தெரிவித்தார்.