தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே
தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய் என அண்ணாமலையை விமர்சித்துள்ளார் ராஜ் தாக்கரே
மகாராஷ்டிர தலைநகர் மும்பையை மீண்டும் பாம்பே என்று மாற்ற வேண்டும் என பேசியதற்காக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையை, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக விமரிசித்துள்ளார்.
தமிழர்கள் குறித்தும், அண்ணாமலை குறித்தும் ராஜ்தாக்கரே பேசியிருக்கும் அவதூறான கருத்துகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மகாராஷ்டிரத்தில், ஜனவரி 15ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்திருந்தார்.
Advertisement
அப்போது அவர் பேசுகையில், மும்பை மாநகரம், மகாராஷ்டிரத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது சர்வதேச நகரம். இதனை மீண்டும் பாம்பே என்று மாற்ற வேண்டும் என்று பேசியிருந்தார்.
இதற்கு, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இருந்து வந்த உனங்களுக்கும், இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் மும்பையைப் பற்றி பேசுகிறார். அதனால்தான் உங்களை எல்லாம் பால் தாக்கரே மகாராஷ்டிரத்திலிருந்து விரட்டி அடித்தார். வட இந்தியர்களுக்கு எதிராக இதுவரை அவதூறாகப் பேசிவிட்டு இப்போது இப்படி பேசுவதா? என்று ஆவேசமாகக் கூறினார்.
தமிழர்கள் மற்றும் அண்ணாமலை குறித்து மிக மோசமான விமர்சனங்களை ராஜ் தாக்கரே தற்போது பேசியிருப்பது தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.