பதவியேற்றவுடனேயே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மறைமுகமாக சாடிய நிதின் நவீன்!
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாஜகவின் புதிய தேசிய தலைவர் நிதின் நவீன் பேச்சு...
எதிர்க்கட்சிகள் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுவதாக பாஜகவின் புதிய தேசிய தலைவர் நிதின் நவீன் பேசியுள்ளார்.
தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, கடந்த 2020 ஜனவரியில் பாஜக தேசிய தலைவராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரின் 3 ஆண்டு பதவிக் காலம் ஏற்கெனவே நிறைவுற்ற பிறகும் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அப்பதவியில் நீடித்து வந்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, பாஜகவின் புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஜன. 19) மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நிதின் நவீனைத் தவிர வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, நிதின் நவீன் போட்டியின்றி கட்சியின் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஐந்து முறை பிகார் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். கட்சியின் உயரிய பதவியை வகிக்கும் மிகவும் இளைய தலைவர் ஆவார்.
தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்பட கட்சி மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்துப் பேசினார்.
'திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியையே பதவி நீக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. எதிர்க்கட்சிகள் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுகின்றன' என்றார்.
மேலும் பேசிய அவர், "சநாதன நம்பிக்கைகளைப் பாதுகாக்கவும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவும் மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, அசாம், புதுச்சேரியில் வரவிருக்கும் தேர்தல்களில் நாம் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டும். இந்த சநாதன எதிர்ப்பு சக்திகளை நாம் தோற்கடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தீபம் ஏற்றும் பாரம்பரியத்தைத் தடுக்கும் சக்திகளுக்கு அரசியலில் இடமிருக்கக் கூடாது. இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் சேர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
Nitin Nabin criticized the opposition parties, including the DMK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.